Friday, December 30, 2011

புதிய ஆண்டில் வெற்றிபெற...

புதிய ஆண்டு பிறக்கும் போது, நம் எல்லாருடைய மனதிலுமே ஆயிரம் ஆயிரம் ஆசைகளும், கனவுகளும் பிறக்கின்றன. புதிய ஆண்டிலே இப்படியெல்லாம் வாழவேண்டும் என்ற ஆசைகள் பிறக்காத மனிதர்கள் இருக்கமுடியாது. ஆனால் அந்த ஆசைகளையெல்லாம் நிஜமாக்கிக் காட்டுபவர்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்?

புதிய ஆண்டு பிறக்கும் போது, பள்ளியில் பயிலும் பல இளையோருக்கும், வருகின்ற ஆண்டுப் பொதுத்தேர்விலே மாநிலத்திலேயே முதலிடம் பெறவேண்டும் என ஆசைப் பிறக்கிறது. பணியாற்றுவோருக்கு, பணியாற்றும் இடங்களிலே அன்போடும், அமைதியோடும் பிறருக்கு உதவ வேண்டும் என ஆசைப் பிறக்கிறது. குடும்பத்திலுள்ளவர்களுக்கு, இந்த வருஷம் சம்பாதிப்பதை கொஞ்சமாவது சேர்த்து வைக்க வேண்டும் என ஆசைப் பிறக்கிறது. இன்னும் சிலருக்கு, இந்த புதிய வருஷத்துல குடும்பத்தினரோடு, உடன்பிறந்தவர்களோடு, உற்றார் உறவினர்கள், நண்பர்களோடு, சண்டை, சச்சரவு இல்லாத நல்ல உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என ஆசைப் பிறக்கிறது. நமக்கு இருக்கிற எல்லா கெட்ட பழக்கவழக்கங்களையும் விட்டுவிட்டு புதிய மனிதர்களாக வாழவேண்டும் எனவும் சிலருக்கு ஆசைப் பிறக்கிறது. புதிய ஆண்டு பிறக்கும் போது, இப்படி எண்ணற்ற ஆசைகளும், கனவுகளும் நம்மிலே பிறக்கின்றன. அந்த கனவுகளையெல்லாம் நம்மில் எத்தனை பேர் நனவாக்குகிறோம்? நமது ஆசைகளையெல்லாம் எத்தனை பேர் நிஜங்களாக மாற்றுகிறோம்? ஆசைப்பட்டுவிட்டால் மட்டும் நாம் நினைப்பதை அடைந்துவிட முடியாது. மாறாக அவற்றை அடைவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். அதற்கு முதலில் திட்டமிட வேண்டும். திட்டமிட்டுவிட்டால் மட்டும் போதுமா? போதாது.

திட்டமிட்டதெல்லாம் அப்படியே நடந்து விட வேண்டும் என்ற அவசியமில்லை. திட்டமிட்டதெல்லாம் அப்படியே நடந்துவிடுமென்றால், வரலாறு முழுவதுமே வெற்றிப் பக்கங்களாகத்தான் இருக்கும். ஆனால் வரலாறு அப்படியில்லையே? வெகுசில மனிதர்கள் தான் வரலாற்றிலும், மனித மனங்களிலும் நீங்காத இடம்பிடித்திருக்கிறார்கள். அவர்கள்தான் கனவுகளை நனவாக்கியவர்கள். அவர்களைப் பற்றித்தான் வாழ்ந்தவர் வழியில் என்ற நிகழ்ச்சியில் நாள்தோறும் கேட்கிறோம். இந்த வரலாற்று சிறப்புமிக்க மனிதர்கள், கனவுகளை நனவாக்கியதற்கு பின்னால் எத்தனை தோல்விகள், எத்தனை வலி, வருத்தங்கள், வேதனைகள் என்பதை மறந்து விடுகிறோம். 


தாமஸ் ஆல்வா எடிசன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒலிப்பதிவுக் கருவி, திரைப்படம் எடுக்கும் கருவி, மின்விளக்கு என 1093 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். இவரது வெற்றிக்குப் பின்னால் எத்தனை, எத்தனைத் தோல்விகள் இருந்தன. ஆனால் எடிசனோ, “ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படிக்கட்டு” என்றார். “ஒவ்வொரு முறையும் தோற்கும்போது எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என கற்றுக்கொண்டேன்” என்றும் சொன்னாராம். அவர் அடைந்த அனைத்துத் தோல்விகளும் சேர்ந்து, அவரது முயற்சியைத் தோற்கடிக்க முடியவில்லை. எனவேதான் அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதராகத் திகழ்கிறார்.

‘முயற்சித் திருவினையாக்கும்’ என்பதற்கு கஜினி முகமது, எடிசன் என பலரை உதாரணங்களாகச் சொல்லலாம். அவர்களைப் போல வெற்றிகளைச் சுவைக்க ஆசைப்படும் நாம், அவர்களைப் போல கடினமாக உழைக்க வேண்டும், எத்தனை தோல்விகள் அடைந்தாலும் மீண்டும் முயற்சிச் செய்ய வேண்டும் என்ற பாடங்களை அவ்வளவாக உள்வாங்குவதில்லை.

வெற்றிபெற்றவர்களின் வரலாறுகளைக் கேட்கும்போது நம்மில் நம்பிக்கை பிறக்கிறது. நாமும் அவ்வாறு வாழ வேண்டும் என முடிவெடுக்கிறோம். ஆனால் அதற்கான வழிமுறைகளைச் சிலரே சிந்திக்கின்றோம். அவ்வழிகளில் முன்னேறிச்செல்கின்றவர்கள், பாதையிலே தடைகள் வரும்போது சிலர் தடுமாறிவிடுகிறோம், சிலர் பின்வாங்கிவிடுகிறோம். வெகு சிலரே, தடைகளையும் மீறி, இலட்சியத்தில் நிலைத்திருந்து, இறுதி இலக்கை அடைகிறோம். 


நாம் நினைத்தவாறு, ஆசைப்பட்டவாறு நம் கனவுகளை நினைவாக்க, நாம் பின்பற்ற வேண்டிய இன்னொன்றை நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். “புதிய ஆண்டிலே என்ன புதிய முடிவு எடுத்திருக்கிறாய்” என்று கேட்டால், மிக நீண்ட பட்டியலை கொடுக்கக்கூடாது. நாம் சாதிக்க விழைபவைகளில் முக்கியமானதை நாம் தேர்ந்துத் தெளிய வேண்டும்.
இந்திய கிரிக்கெட் அணி 5ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், இந்தியா முதல் 3 போட்டிகளை வென்றபின், அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியிடம், 5 போட்டிகளையும் வெல்வதுதான் உங்கள் திட்டமா என்று கேட்கும்போதெல்லாம், “நாங்கள் அடுத்த ஒரு போட்டி மீது மட்டும் தான் இப்போதைக்கு கவனம் செலுத்துகிறோம்” என்றுதான் சொல்வார். அகலக்கால் வைக்கக் கூடாது என்பதைத்தான் இது நமக்குச் சொல்கிறது. ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்து உலகச் சாதனைப் படைத்தவர் வீரேந்திர சேவாக் அவர் 219ரன்கள் எடுத்தார். இது அவரது ஆசையால் மட்டும் விளைந்ததல்ல. மாறாக அவரது திட்டமிடுதலும், கடின உழைப்பும், முயற்சியுமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

துவங்கியிருக்கிற புதிய ஆண்டில் நமது வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமான ஒரு காரியத்தை மட்டும் எடுத்து அதிலே வெற்றிபெற முயற்சி செய்வோம். இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக நம் கனவுகளை நனவாக்குவோம்.


இன்று யார் நேர்மையாளர்கள்?

இன்று நேர்மை என்றால் என்ன? யார் நேர்மையாளர்கள்?

எதையும் மறைக்காமல் திறந்த மனதோடு நபர்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளாமல் உள்ளதை உள்ளபடி உண்மையாக பேசுவதும் அதன்படி செயல்படுவதுமே நேர்மையெனப்படும். ஆனால் இன்றைய நேர்மை எப்படி இருக்கிறது?

எனக்கு நன்கு பழக்கமான இளைஞன் ஒருவர், இளங்கலை இயற்பியல் படித்து, பிறகு ஆசிரியர் பயிற்சி பெற்றார். தனியார் பள்ளி ஒன்றில் வேலை செய்து கொண்டே, தொலைதூரக் கல்வி மூலம் முதுகலை இயற்பியல் படித்தார். நன்கு படிக்கக் கூடியவர். ஒரு பாடத்தில் கூட தேர்ச்சி பெறாமல் இருந்ததில்லை. முதுகலை முதல் ஆண்டுத்தேர்விலே முதன்முறையாக ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. நன்கு படித்தேன், நன்கு எழுதினேன். ஆனால் முடிவு இப்படி இருக்கிறது என்று வேதனைப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல், மேலும் நன்கு படித்து, அடுத்த ஆண்டு தேர்ச்சி பெறாத பாடத்தை எழுதினார். மீண்டும் தேர்ச்சி பெறவில்லை. அதிர்ச்சி அடைந்தார். மனம் உடைந்து போனார். ஆனால் நண்பர்கள் அவரைத் தேற்றினர். தொலைதூரக்கல்வியிலே இதெல்லாம் நடக்கத்தான் செய்கிறது. கொஞ்சம் பணம் கொடுத்தால் போதும் தேர்ச்சி பெற்றவாறு சான்றிதழ் வாங்கிவிடலாம் என்று சொன்னார்கள். அந்த மாணவருடைய பெற்றோரும் பணத்தைக் கட்டித் தேர்ச்சி பெற்றவாறு சான்றிதழைப் பெற்றுவிட்டனர். இதுதான் இன்றைய நேர்மை.



உண்மைக்கே காலம் இல்லை, உண்மையா இருந்தா, இந்த உலகத்துல வாழமுடியாது. நல்லவனுக்கு நல்லவனாக இருக்கணும், ஏமாற்றுப்பேர்வழிகளை, அவர்கள் வழியிலேயே சென்று ஏமாற்ற வேண்டும். இப்படி வாழ்பவர்களைத்தான் இந்த உலகமும் புத்திசாலி என்று ஏற்றுக் கொள்கிறது, பாராட்டுகிறது. இன்று தொலைதூரக் கல்வி பயில்வோர் தேர்வு மையங்களிலே புத்தகம் வைத்து, பார்த்து எழுதுவது சகஜமாகிவிட்டது. “யார் தான் இன்னிக்கு லஞ்சம் வாங்கல” என்று லஞ்சம் வாங்குவதை நியாயப்படுத்துவதையும் பார்க்க முடிகிறது. இன்று கணிணி உலகில் புதிதாக வரும் மென்பொருள்களை (Software) முறையாக காசு கொடுத்து வாங்காமல் முறையில்லாமல் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துவிட்டு “நான் எந்த மென்பொருளையுமே (Software) காசு கொடுத்து வாங்குவதில்லை” எனப் பெருமையாகச் சொல்லிக் கொள்வதும் தான் இன்றைய நேர்மையின் மறுபக்கங்கள். இவ்வாறு தவறுகள் நியாயப்படுத்தப்பட்டு, அது சரிதான், நியாயம்தான், நேர்மைதான் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதுதான் மிகவும் வருத்தத்துக்குரியது.



இதைப்பற்றிப் பேசுகின்ற போது எனக்கு ஒரு நெருடல் ஏற்படுகிறது. “இதெல்லாம் பேச நல்லாயிருக்கும், ஆனா வாழ்க்கையில நடக்குமா” என்ற ஒரு நெருடல்தான். ஏன் இந்த நெருடல்? “இந்த உலகத்துல இப்படித்தான் வாழணும், இல்லன்னா வாழ முடியாது” என்று நம் மனதில் மிக ஆழமாக பதிந்து விட்டது. இதையும் தாண்டி, இதையெல்லாம் தீமை என்று யார் சொன்னது? என்ற கேள்வி கேட்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள். 


ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறோம்? ஏனெனில், நாம் நீண்ட கால பயன்களையும், விளைவுகளையும் யோசிப்பதில்லை. யோசிக்கவும் விரும்புவதில்லை. அதற்கு நேரமுமில்லை. ஏனெனில், எல்லாமே அவசரம் தான். இந்த அவசர உலகத்தில் அப்பப்ப, அதுஅது, நடந்தா போதும். இப்போதைக்கு நாம் விரும்புவதை அடைய நேர்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. “நம்ம மட்டும் நேர்மையா இருந்து, என்ன செஞ்சுட போறோம்? நாமாக நேர்மை தவறவில்லை. எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். எனவே, ஊரோடு ஒத்துப்போ” என்பதைப்போல வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. ஆனால் நீண்ட கால ஓட்டத்தில் நாமே நினைத்தாலும் நம்மால் நேர்மையாக வாழமுடியாது. ஏனெனில் நமது சிந்தனைகளும், செயல்களும் நேர்மை என்பதற்கு பதிலாக மாற்றுக்கருத்தாக்கத்தை நம்மிலே ஏற்படுத்திவிடும். நீண்டகாலத்திற்கு பிறகு, ‘வாய்மை வெல்லும்’, ‘நேர்மையாளர்களை இறைவன் கைவிடமாட்டார்’ என்பதெல்லாம் நமது மனதை விட்டு மட்டுமல்ல மாறாக நாம் வாழும் சமூகத்திலிருந்தே வெளியேறி இருக்கும்.

தனி ஒருவரின் நேர்மையே இந்த உலகம் நேர்மையாக மாறுவதற்கு முதல்படி. முதல்படியை யார் எடுத்து வைப்பது?