Friday, December 30, 2011

புதிய ஆண்டில் வெற்றிபெற...

புதிய ஆண்டு பிறக்கும் போது, நம் எல்லாருடைய மனதிலுமே ஆயிரம் ஆயிரம் ஆசைகளும், கனவுகளும் பிறக்கின்றன. புதிய ஆண்டிலே இப்படியெல்லாம் வாழவேண்டும் என்ற ஆசைகள் பிறக்காத மனிதர்கள் இருக்கமுடியாது. ஆனால் அந்த ஆசைகளையெல்லாம் நிஜமாக்கிக் காட்டுபவர்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்?

புதிய ஆண்டு பிறக்கும் போது, பள்ளியில் பயிலும் பல இளையோருக்கும், வருகின்ற ஆண்டுப் பொதுத்தேர்விலே மாநிலத்திலேயே முதலிடம் பெறவேண்டும் என ஆசைப் பிறக்கிறது. பணியாற்றுவோருக்கு, பணியாற்றும் இடங்களிலே அன்போடும், அமைதியோடும் பிறருக்கு உதவ வேண்டும் என ஆசைப் பிறக்கிறது. குடும்பத்திலுள்ளவர்களுக்கு, இந்த வருஷம் சம்பாதிப்பதை கொஞ்சமாவது சேர்த்து வைக்க வேண்டும் என ஆசைப் பிறக்கிறது. இன்னும் சிலருக்கு, இந்த புதிய வருஷத்துல குடும்பத்தினரோடு, உடன்பிறந்தவர்களோடு, உற்றார் உறவினர்கள், நண்பர்களோடு, சண்டை, சச்சரவு இல்லாத நல்ல உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என ஆசைப் பிறக்கிறது. நமக்கு இருக்கிற எல்லா கெட்ட பழக்கவழக்கங்களையும் விட்டுவிட்டு புதிய மனிதர்களாக வாழவேண்டும் எனவும் சிலருக்கு ஆசைப் பிறக்கிறது. புதிய ஆண்டு பிறக்கும் போது, இப்படி எண்ணற்ற ஆசைகளும், கனவுகளும் நம்மிலே பிறக்கின்றன. அந்த கனவுகளையெல்லாம் நம்மில் எத்தனை பேர் நனவாக்குகிறோம்? நமது ஆசைகளையெல்லாம் எத்தனை பேர் நிஜங்களாக மாற்றுகிறோம்? ஆசைப்பட்டுவிட்டால் மட்டும் நாம் நினைப்பதை அடைந்துவிட முடியாது. மாறாக அவற்றை அடைவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். அதற்கு முதலில் திட்டமிட வேண்டும். திட்டமிட்டுவிட்டால் மட்டும் போதுமா? போதாது.

திட்டமிட்டதெல்லாம் அப்படியே நடந்து விட வேண்டும் என்ற அவசியமில்லை. திட்டமிட்டதெல்லாம் அப்படியே நடந்துவிடுமென்றால், வரலாறு முழுவதுமே வெற்றிப் பக்கங்களாகத்தான் இருக்கும். ஆனால் வரலாறு அப்படியில்லையே? வெகுசில மனிதர்கள் தான் வரலாற்றிலும், மனித மனங்களிலும் நீங்காத இடம்பிடித்திருக்கிறார்கள். அவர்கள்தான் கனவுகளை நனவாக்கியவர்கள். அவர்களைப் பற்றித்தான் வாழ்ந்தவர் வழியில் என்ற நிகழ்ச்சியில் நாள்தோறும் கேட்கிறோம். இந்த வரலாற்று சிறப்புமிக்க மனிதர்கள், கனவுகளை நனவாக்கியதற்கு பின்னால் எத்தனை தோல்விகள், எத்தனை வலி, வருத்தங்கள், வேதனைகள் என்பதை மறந்து விடுகிறோம். 


தாமஸ் ஆல்வா எடிசன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒலிப்பதிவுக் கருவி, திரைப்படம் எடுக்கும் கருவி, மின்விளக்கு என 1093 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். இவரது வெற்றிக்குப் பின்னால் எத்தனை, எத்தனைத் தோல்விகள் இருந்தன. ஆனால் எடிசனோ, “ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படிக்கட்டு” என்றார். “ஒவ்வொரு முறையும் தோற்கும்போது எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என கற்றுக்கொண்டேன்” என்றும் சொன்னாராம். அவர் அடைந்த அனைத்துத் தோல்விகளும் சேர்ந்து, அவரது முயற்சியைத் தோற்கடிக்க முடியவில்லை. எனவேதான் அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதராகத் திகழ்கிறார்.

‘முயற்சித் திருவினையாக்கும்’ என்பதற்கு கஜினி முகமது, எடிசன் என பலரை உதாரணங்களாகச் சொல்லலாம். அவர்களைப் போல வெற்றிகளைச் சுவைக்க ஆசைப்படும் நாம், அவர்களைப் போல கடினமாக உழைக்க வேண்டும், எத்தனை தோல்விகள் அடைந்தாலும் மீண்டும் முயற்சிச் செய்ய வேண்டும் என்ற பாடங்களை அவ்வளவாக உள்வாங்குவதில்லை.

வெற்றிபெற்றவர்களின் வரலாறுகளைக் கேட்கும்போது நம்மில் நம்பிக்கை பிறக்கிறது. நாமும் அவ்வாறு வாழ வேண்டும் என முடிவெடுக்கிறோம். ஆனால் அதற்கான வழிமுறைகளைச் சிலரே சிந்திக்கின்றோம். அவ்வழிகளில் முன்னேறிச்செல்கின்றவர்கள், பாதையிலே தடைகள் வரும்போது சிலர் தடுமாறிவிடுகிறோம், சிலர் பின்வாங்கிவிடுகிறோம். வெகு சிலரே, தடைகளையும் மீறி, இலட்சியத்தில் நிலைத்திருந்து, இறுதி இலக்கை அடைகிறோம். 


நாம் நினைத்தவாறு, ஆசைப்பட்டவாறு நம் கனவுகளை நினைவாக்க, நாம் பின்பற்ற வேண்டிய இன்னொன்றை நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். “புதிய ஆண்டிலே என்ன புதிய முடிவு எடுத்திருக்கிறாய்” என்று கேட்டால், மிக நீண்ட பட்டியலை கொடுக்கக்கூடாது. நாம் சாதிக்க விழைபவைகளில் முக்கியமானதை நாம் தேர்ந்துத் தெளிய வேண்டும்.
இந்திய கிரிக்கெட் அணி 5ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், இந்தியா முதல் 3 போட்டிகளை வென்றபின், அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியிடம், 5 போட்டிகளையும் வெல்வதுதான் உங்கள் திட்டமா என்று கேட்கும்போதெல்லாம், “நாங்கள் அடுத்த ஒரு போட்டி மீது மட்டும் தான் இப்போதைக்கு கவனம் செலுத்துகிறோம்” என்றுதான் சொல்வார். அகலக்கால் வைக்கக் கூடாது என்பதைத்தான் இது நமக்குச் சொல்கிறது. ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்து உலகச் சாதனைப் படைத்தவர் வீரேந்திர சேவாக் அவர் 219ரன்கள் எடுத்தார். இது அவரது ஆசையால் மட்டும் விளைந்ததல்ல. மாறாக அவரது திட்டமிடுதலும், கடின உழைப்பும், முயற்சியுமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

துவங்கியிருக்கிற புதிய ஆண்டில் நமது வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமான ஒரு காரியத்தை மட்டும் எடுத்து அதிலே வெற்றிபெற முயற்சி செய்வோம். இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக நம் கனவுகளை நனவாக்குவோம்.


இன்று யார் நேர்மையாளர்கள்?

இன்று நேர்மை என்றால் என்ன? யார் நேர்மையாளர்கள்?

எதையும் மறைக்காமல் திறந்த மனதோடு நபர்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளாமல் உள்ளதை உள்ளபடி உண்மையாக பேசுவதும் அதன்படி செயல்படுவதுமே நேர்மையெனப்படும். ஆனால் இன்றைய நேர்மை எப்படி இருக்கிறது?

எனக்கு நன்கு பழக்கமான இளைஞன் ஒருவர், இளங்கலை இயற்பியல் படித்து, பிறகு ஆசிரியர் பயிற்சி பெற்றார். தனியார் பள்ளி ஒன்றில் வேலை செய்து கொண்டே, தொலைதூரக் கல்வி மூலம் முதுகலை இயற்பியல் படித்தார். நன்கு படிக்கக் கூடியவர். ஒரு பாடத்தில் கூட தேர்ச்சி பெறாமல் இருந்ததில்லை. முதுகலை முதல் ஆண்டுத்தேர்விலே முதன்முறையாக ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. நன்கு படித்தேன், நன்கு எழுதினேன். ஆனால் முடிவு இப்படி இருக்கிறது என்று வேதனைப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல், மேலும் நன்கு படித்து, அடுத்த ஆண்டு தேர்ச்சி பெறாத பாடத்தை எழுதினார். மீண்டும் தேர்ச்சி பெறவில்லை. அதிர்ச்சி அடைந்தார். மனம் உடைந்து போனார். ஆனால் நண்பர்கள் அவரைத் தேற்றினர். தொலைதூரக்கல்வியிலே இதெல்லாம் நடக்கத்தான் செய்கிறது. கொஞ்சம் பணம் கொடுத்தால் போதும் தேர்ச்சி பெற்றவாறு சான்றிதழ் வாங்கிவிடலாம் என்று சொன்னார்கள். அந்த மாணவருடைய பெற்றோரும் பணத்தைக் கட்டித் தேர்ச்சி பெற்றவாறு சான்றிதழைப் பெற்றுவிட்டனர். இதுதான் இன்றைய நேர்மை.



உண்மைக்கே காலம் இல்லை, உண்மையா இருந்தா, இந்த உலகத்துல வாழமுடியாது. நல்லவனுக்கு நல்லவனாக இருக்கணும், ஏமாற்றுப்பேர்வழிகளை, அவர்கள் வழியிலேயே சென்று ஏமாற்ற வேண்டும். இப்படி வாழ்பவர்களைத்தான் இந்த உலகமும் புத்திசாலி என்று ஏற்றுக் கொள்கிறது, பாராட்டுகிறது. இன்று தொலைதூரக் கல்வி பயில்வோர் தேர்வு மையங்களிலே புத்தகம் வைத்து, பார்த்து எழுதுவது சகஜமாகிவிட்டது. “யார் தான் இன்னிக்கு லஞ்சம் வாங்கல” என்று லஞ்சம் வாங்குவதை நியாயப்படுத்துவதையும் பார்க்க முடிகிறது. இன்று கணிணி உலகில் புதிதாக வரும் மென்பொருள்களை (Software) முறையாக காசு கொடுத்து வாங்காமல் முறையில்லாமல் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துவிட்டு “நான் எந்த மென்பொருளையுமே (Software) காசு கொடுத்து வாங்குவதில்லை” எனப் பெருமையாகச் சொல்லிக் கொள்வதும் தான் இன்றைய நேர்மையின் மறுபக்கங்கள். இவ்வாறு தவறுகள் நியாயப்படுத்தப்பட்டு, அது சரிதான், நியாயம்தான், நேர்மைதான் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதுதான் மிகவும் வருத்தத்துக்குரியது.



இதைப்பற்றிப் பேசுகின்ற போது எனக்கு ஒரு நெருடல் ஏற்படுகிறது. “இதெல்லாம் பேச நல்லாயிருக்கும், ஆனா வாழ்க்கையில நடக்குமா” என்ற ஒரு நெருடல்தான். ஏன் இந்த நெருடல்? “இந்த உலகத்துல இப்படித்தான் வாழணும், இல்லன்னா வாழ முடியாது” என்று நம் மனதில் மிக ஆழமாக பதிந்து விட்டது. இதையும் தாண்டி, இதையெல்லாம் தீமை என்று யார் சொன்னது? என்ற கேள்வி கேட்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள். 


ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறோம்? ஏனெனில், நாம் நீண்ட கால பயன்களையும், விளைவுகளையும் யோசிப்பதில்லை. யோசிக்கவும் விரும்புவதில்லை. அதற்கு நேரமுமில்லை. ஏனெனில், எல்லாமே அவசரம் தான். இந்த அவசர உலகத்தில் அப்பப்ப, அதுஅது, நடந்தா போதும். இப்போதைக்கு நாம் விரும்புவதை அடைய நேர்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. “நம்ம மட்டும் நேர்மையா இருந்து, என்ன செஞ்சுட போறோம்? நாமாக நேர்மை தவறவில்லை. எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். எனவே, ஊரோடு ஒத்துப்போ” என்பதைப்போல வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. ஆனால் நீண்ட கால ஓட்டத்தில் நாமே நினைத்தாலும் நம்மால் நேர்மையாக வாழமுடியாது. ஏனெனில் நமது சிந்தனைகளும், செயல்களும் நேர்மை என்பதற்கு பதிலாக மாற்றுக்கருத்தாக்கத்தை நம்மிலே ஏற்படுத்திவிடும். நீண்டகாலத்திற்கு பிறகு, ‘வாய்மை வெல்லும்’, ‘நேர்மையாளர்களை இறைவன் கைவிடமாட்டார்’ என்பதெல்லாம் நமது மனதை விட்டு மட்டுமல்ல மாறாக நாம் வாழும் சமூகத்திலிருந்தே வெளியேறி இருக்கும்.

தனி ஒருவரின் நேர்மையே இந்த உலகம் நேர்மையாக மாறுவதற்கு முதல்படி. முதல்படியை யார் எடுத்து வைப்பது?


Tuesday, November 29, 2011

சம்பாதிப்பது எதற்கு?

வெளிநாட்டுக்காரர்களைப் பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது. ஏனென்றால் வாரத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்கள் வேலை செய்கிறார்கள். வாரத்தின் இறுதிநாள், எங்காவது சுற்றுலாதளம் அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்று, உண்டு களித்து நேரத்தையும், வாரம் முழுவதும்  உழைத்துச் சேர்த்த பணத்தை மகிழ்ச்சியாக செலவழித்து, களைப்பு நீங்கி அடுத்தவாரத்தில் உற்சாகமாக நுழைகிறார்கள்.



ஆனா நம்ம ஊர்ல என்ன நடக்குது? வாரம் முழுவதும் வேலைசெய்து, உடல் சோர்ந்து போய் இருந்தாலும் கூட, ஓய்வுநாளன்று இருமடங்கு ஊதியம் கிடைக்கும் என்று ஓய்வு கூட எடுக்காமல் உழைக்கிறோம். அப்படி ஓய்வில்லாமல் உழைத்துச் சம்பாதிப்பது எதற்காக? சேர்த்து வைக்கத்தான். சேர்த்து வைப்பது எதற்காக? நன்கு வாழ்வதற்காகத்தான். கஷ்டப்பட்ட சம்பாதித்துச் சேர்த்த  பணத்தை நமது மகிழ்ச்சிக்காக பயன்படுத்துகிறோமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சம்பாதிப்பதன் அடிப்படை நோக்கம் என்ன? அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் போன்றவற்றோடு வசதியாக வாழத்தான். மனிதர்களின் பரிணாம வளர்ச்சியைப் போன்று, சம்பாதிப்பதன் நோக்கமும் வளர்ச்சி பெற்றிருக்கிறது. எதிர்கால வாழ்விற்காக, சமூகத்தில் ஒர் அந்தஸ்தோடு வாழ, உறவினர்களோடு, பக்கத்து வீட்டுகாரர்களோடு போட்டி போட, பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக என சம்பாதிப்பதன் நோக்கத்தை அடுக்கிக் கொண்டே செல்லலாம். எனினும் சம்பாதிப்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்குத்தான் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற கருத்து. 



முன்பொரு காலத்தில் சோம்பேறிகளாக வீட்டில் முடங்கிக்கிடக்கக் கூடாது. உழைத்துச் சம்பாதிக்க வேண்டும். அப்போதுதான் எல்லாவித வசதிகளோடு மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று கற்பிக்கப்பட்டது. இன்று பெரும்பாலும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது சம்பாதிக்கவும் செய்கிறோம். ஆனால் சம்பாதிப்பதன் நோக்கத்தில் ஒரு தேக்கநிலை உருவாகிவிட்டதெனக் கருதுகிறேன். இப்போது நமக்குத் தெரிந்தவையெல்லாம் சம்பாதிப்பது மற்றும் சேர்த்து வைப்பதுதான். அடுத்த நிலைக்கு கடந்து சென்று அவற்றை செலவழித்து மகிழ்ச்சியாக வாழ்கிறோமா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.



முன்பொருகாலத்தில் வயது முதிர்ந்தகாலத்தில் நமது பராமரிப்பிற்காக சேர்த்து வைக்கவேண்டி இருந்தது. ஆனால் இன்று பல்வேறு ஆயுள்காப்பீடுகள் செயல்பாட்டில் உள்ளன. எனினும் சேர்த்து வைக்கும் மனநிலையிலிருந்து நம்மால் மீண்டுவரமுடியவில்லை. சேர்த்து வைப்பது ஒரு நோயாக நம்மைப் பற்றிக் கொண்டதோ என்ற ஐயமும் பயமும் என்னில் எழுகின்றன.

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டபிறகு, சம்பாதிக்கும் பணத்தை பயனள்ள வகையில் செலவிட்டு  நாமும் மகிழ்ச்சியடைய வேண்டும். பிறருடைய மகிழ்ச்சிக்கும் அவற்றைப் பயன்படுத்தும் போது நமது மகிழ்ச்சி இரட்டிப்படைகின்றது.

Monday, November 28, 2011

முல்லைப் பெரியார் - வஞ்சிக்கப்படும் தமிழர்கள்

முல்லைப் பெரியார் அணை விவகாரத்திலே பிரதமர் தலையிட வேண்டும் எனக்கூறி, இன்று பாரளுமன்றப் பிரதிநிதிகள், பாரளுமன்றத்தின் முன் தர்ணா செய்தனர். கேரள மக்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்றும், தமிழக அரசின் போக்கைக் கண்டிக்க வேண்டும் எனவும், கேரளக்காங்கிரஸ் மற்றும் மார்க். கம்யூனிஸ்ட் பாரளுமன்றப் பிரதிநிதிகள் பாரளுமன்றத்தின் முன் தர்ணா செய்தனர்.செய்தி 



இந்த முல்லைப் பெரியார் அணை குறித்து கேரளா முழுவதும், கிராமங்கள் தோறும் குறும்படங்கள் காண்பித்து ஆதரவு திரட்டிவருகின்றனர். மத்திய அரசு தலையிட்டு பிரச்சனையைத் தீர்த்து வைக்க, இன்று கேரள முழுவதும் முழுக்கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையாகவே இந்த விவிகாரத்தில் வஞ்சிக்கப்படுவது தமிழர்கள்தான். இதற்கு ஆதாரம் இதோ: இது 45 நிமிட வீடியோ. வஞ்சிப்படும் தமிழர்களுக்காக ஒதுக்கலாமே?

இதைத் தெரிந்த கொண்ட நாம், நம் மக்களிடையே விழிப்புணர்வைக் கொண்டுவர வேண்டியது தமிழர்களாகிய நமது கடைமை. நம்மால் முழந்த வரை தெரியப்படுத்துவோம்.

Sunday, November 27, 2011

கல்வி எதற்கு?


நம்ம ஊர்ல படிக்கிற பசங்கள பாத்து, 'தம்பி என்ன படிக்கிறன்னு கேட்கறத விட, எதுக்குடா படிக்கிற' (பிற்காலத்தில் என்ன வேலை பார்க்கபோகிறாய்) என்ற கேள்விதான் அதிகமாகக் கேட்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான பதில்கள் டாக்டராக அல்லது என்ஜுனியர் ஆகப்போகிறேன் என்றுதான் வருகின்றன.
அப்படியானால் கல்வி எதற்கு? நன்றாகப் படிக்கவேண்டும் என்று சொல்லி வளர்ப்பது எதற்கு? பணியாற்றவா? டாக்டராக அல்லது என்ஜுனியராக பணியாற்றி கை நிறைய சம்பாதிக்கவா? இதற்கான பதிலும் ஆமாம் என்பதைப் போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. அப்படியானால், கல்வி என்பது சம்பாதிப்பதற்கா?

அடிப்படையிலே, கல்வி என்பது கற்று, அறிந்து கொள்வதற்குத்தான். அதனுடைய முதன்மை நோக்கமே கற்றல்தான். அறிந்து கொள்வதுதான் கல்வியின் முதற்குறிக்கோள். முறைப்படி சிந்திப்பதற்கும், சிந்தனைகளைச் சீராக ஒழுங்குபடுத்தி, இறுதிமுடிவுக்கு வருவதற்கும் கல்வி பயன்படுகிறது என்பது மனிதஇனம் அனுபவத்தால் அறிந்துகொண்ட உண்மை. கல்வி என்பது மனிதமனங்களை ஒரிடத்தில் நிறுத்தி, ஒரு குறிப்பிட்ட பாதையில் செல்ல ஊன்றுகோலாக உள்ளது. 

நம் நாட்டில் காரண காரியத்திற்காகத்தான் படிப்பு என்ற நிலை தொடர்கிறது. பள்ளியில் தேர்வு எழுதவேண்டுமா? படிக்கலாம். அலுவலகத்தில் பணியில் அமர வேண்டுமா? படிக்கலாம். சும்மா எதற்காகப் படிக்கவேண்டும?; என்ற மனநிலைக் காணப்படுவதை நாம் அறிவோம். பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளும் தவிர, நம்நாட்டில் எங்காவது யாராவது படிப்பதைப் பார்க்கமுடிகிறதா? இல்லை. ஏனெனில் கல்வி என்பது தேவைக்காகக் கற்கப்படுவதாகவும், அதன் தேவை முடிந்ததும் தூக்கிஎறியப்படும் காரியமாக இருக்கிறது. 

ஆனால் மேலைநாடுகளில் பேருந்தில் செல்லும் போதும், இரயிலில் செல்லும்போதும் கூட படிக்கிறார்கள். அவர்கள் படிப்பது பாடப்புத்தகமல்ல. தேர்வுக்குச் செல்;லும் அவசர நேரத்தில் படிக்கிறவர்களுமல்ல. நேரம் கழிய வேண்டும், அதோடு இந்த நேரத்தை பயனள்ளதை அறிந்து கொள்ள பயன்படுத்தலாமே என்ற எண்ணத்தில் படிக்கிறார்கள். மேலைநாட்டினர் உலகைத் தெரிந்து கொள்ள கல்வி அவசியமென நன்கு உணர்ந்திருக்கிறார்கள். (சும்மாவா சொன்னாங்க கல்வி கண் போன்றதென்று). மேலை நாடுகளில், நன்கு ஆண்டு அனுபவித்த முதியோர்கள் கூட எதாவது வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். காரணம் கல்வி அவர்களது உலகை விரிவாக்குகிறது என்பதை தங்கள் அனுபவத்தால் உணர்ந்திருக்கிறார்கள். 

ஆனால் நம்நாட்டில், சிறுவயதிலிருந்தே கல்வி என்பது விஷத்தைப்போல வெறுத்து ஒதுக்கப்படுகிறது. பணியாற்றுவதற்கும், நன்கு சம்பாதிக்கவும் கல்வி தேவை. எனவே கஷ்டப்பட்டு படிக்க வேண்டும் என்ற மனநிலைக்; காணப்படுகிறது. உலகை அறிந்து கொள்ள கல்வி ஓர் ஆயுதம் என்ற மனநிலையில்லை. எனவேதான் கல்வி நமக்கு கசக்கிறது
நம்மிடையே இருக்கின்ற கல்வி பயிலாத பெற்றோர்கள் தங்கள் பேரப்பிள்ளைகளுக்கு கல்வி என்பது அவசியம். அது இல்லாமல், ஒரு இடத்திற்கு செல்லவேண்டுமானால் எந்த பேருந்து என்பதை அறிந்துகொள்ள கூட பிறர் உதவியை நாட வேண்டியிருக்கிறது என்பதை தங்கள் அனுபவம் மூலம் சொல்;லிக் கொடுகிறார்கள். இப்படி கல்வி என்பது கண் போன்றது என்று சொல்ல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கணிணிக்கு எப்படி மென்பொருள் அவசியமோ, அதே போல மனிதர்களுக்குக் கல்வி அவசியம். கணிணியில் மென்பொருள் இருந்தால்தான் நாம் நினைக்கின்ற விஷயங்களைச் செய்யமுடியும். அதே போல கல்வி இருந்தால்தான் இவ்வுலகையே தெரிந்துகொள்ள முடியும். எல்லா மனிதர்களும் உடல்நிலையைப் பேணிக்காப்பது போல, பெண்கள் உடலழகைப் பேணிக்காக்க மெனக்கெடுவதைப்போல கல்விக்கும் முக்;கியத்துவம் கொடுக்கவேண்டும். அது நமது உலகை விரிவாக்கும். இப்படிப்பட்ட கல்வி, அறிவில் மட்டும் வளர்பவர்களாக இல்லாமல் சிறந்த மனிதர்களாக நம்மை உருவாக்கிறது என்பதை வரலாற்றிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

20, 30 ஆண்டுகளுக்கு முன்பு நன்கு சம்பாதிக்க வேண்டுமெனில் கல்வி தேவையென சொல்லி, கல்வி அறிவை வளர்த்தோம். இப்போது ஏறக்குறைய எல்லாரும் படிக்க வேண்டும் என்ற உணர்வு வந்திருக்கிறது, படிக்கிறோம். பாராட்டுக்குரியது. இன்றைய தலைமுறையிலே ஏறக்குறைய எல்;லாருமே கல்வி கற்கின்றார்கள். இச்சூழலில்;, கல்வி என்பது பணியாற்ற மட்டும் தான், நல்லதொரு பணியிலமர்ந்ததும் தேவையில்லை என்ற தவறான கருத்தை மாற்றி, கல்வி என்பதன் முதன்மை நோக்கமே அறிந்து கொள்ளதுதான். எனவே கற்றலுக்கும், அறிந்து கொள்வதற்கும் வயதுமில்லை, காலமுமில்லை வாழ்க்கை முடிகிற வரைக்கும் கற்றுக்கொண்டே இருக்கலாம் என்ற மாற்றுச் சிந்தனையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.